உலகிலேயே முதன்முறை! நாப்கின் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து!

உலகிலேயே முதன் முறையாக ஸ்காட்லாந்தில், மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் நாப்கின் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளில் நாப்கின்கள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி பிக் அப் மை பீரியட் (PICK UP MY PERIOD) என்ற செயலி மூலம் எந்த நேரத்திலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹே கேர்ள்ஸ் என்ற சமூக நிறுவனத்தால் இந்த செயலி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதவிடாய் பொருட்கள் கிடைப்பதில் உள்ள நிதி சார்ந்த தடைகள் அகலும் என்றும், அவர்களின் சுகாதாரம் பேணப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

“மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக வழங்குவது சமத்துவத்தையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும். இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும் உலகின் முதல் அரசு என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என்று அந்நாட்டின் சமூக நீதித்துறை செயலாளர் ஷோனா ராபின்சன் தெரிவித்தார்.

நவம்பர் 2020 இல், பள்ளி, கல்லூரி, நூலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களில் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சுகாதாரப் பொருட்களை இலவசமாகப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமை வழங்கும் மசோதாவுக்கு ஆதரவாக ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது. தற்போது மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சுகாதாரப் பொருட்களை வழங்குவது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் சட்டப்பூர்வ கடமையாக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button