உளவு நிறுவனங்கள்!…. (தொடர்: 29) ….. மௌனஅவதானி.

உலகநாடுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்வதற்கான உலகமயமாக்கள் காரணமாகி நிற்கின்றது.இந்த நிலைப்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
தமது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களை அடிமைப்படுத்துவதற்காக ஒற்றர்களை அனுப்பி வேவு பார்ப்பது சர்வாதிகாரம் கொண்ட மன்னர்களின் முதன்மையான இராஜதந்திர அரசியலாக இருந்து வந்துள்ளது.அன்றைய வெளிநாட்டு மன்னர்கள் அல்லது சர்வாதிகாரிகள் படையெடுப்பதற்கு தகுந்த காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு அவர்கள் ஒற்றர்களை அனுப்பி வேவு பார்த்து அவர்கள் கொடுக்கும் தகவலுக்கு அமையவே படையெடுப்புக்கான காலத்தை, நாட்களை நிர்ணயித்தார்கள் என்பதை வரலாற்றை வாசிப்பவர்கள் அறிவார்கள்.
நாட்டுக்கு நாடு நல்லுறவுடன் இருப்பதாக ஒவ்வொரு நாடும் காட்டிக் கொள்வதும், நல்லெண்ணத் தூதுவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் வருகை தந்து ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதுமாக ஒருபுறம் இந்த அணுகுமுறை நடக்கும் அதே சமாந்தரத்தில் அந்தந்த நாடுகளின் அனைத்து கட்டமைப்பின் உறுதிகளையும் அழிப்பதற்கும் கீழ்நிலைக்கும் கொண்டு போவதற்கும் வல்லமை உள்ள நாடுகள் எத்தனிக்கின்றன.
ஒரு நாட்டில் சனத்தொகையின் பெருக்கம் பெருக்கல் வாய்ப்பாட்டு நிலையிலும், பொருளாதார வளர்ச்சி கூட்டல் வாய்ப்பாட்டு நிலையிலும் இருப்பதால் மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு நர்டுகள் தள்ளப்படுகின்றன.
இதனால் பகீரத்தன முயற்சி எடுத்தாவது தத்தமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்பதில் முனைப்பபாக இருக்கின்றன. தமது பொருட்களை ஏற்றுமதி செ;யவதன் மூலம், அதையும் அந்தந்த நாடுகளில் அதே பொருட்களை உற்பத்தி செய்யும் செலவினைவிட அந்த நாடுகளுக்கு மலிவான விலையில் கொடுக்க முயற்சிக்கின்றன.
அதற்கு தமது நாட்டு தூதரகங்களை பயன்படுத்துகின்றன.தூதரகங்கள் வெளிப் பார்வைக்கு, அவை நிலைகொண்டுள்ள நாட்டுக்கு எதிராக பாதகமாக எந்த நகர்வையுமே செய்யாதது போல தோன்றினாலும்;,தாம் நிலை கொண்டுள்ள நாட்டினது அனைத்து விடயங்களைப் பற்றியும் அணுவணுவாக கண்காணித்து தமது நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
தூதரகத்திற்கான நாடு தன்னிடம் இருக்கும் என்னென்ன விடயங்கள், தனது தூதரகங்கள் நிலை கொண்டுள்ள நாடுகளில் இல்லையோ அவற்றை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
உளவு நிறுவனமாக தனித்து இயங்கி ஒற்றர்களை அனுப்பி, சுதேசிய, விலைபோகும் ஒற்றர்கள் மூலமாக தாம் நினைத்ததைச் சாதிப்பதும் ஒரு வேலைத்திட்டமாக இருந்த
போதும் ,தூதரகங்கள் மூலம் அதனைச் சாதிப்பது சுலபமானது மட்டுமல்ல சந்தேகத்திற்கிடமளியாததுமாகும்.
இன்றைய உலகம் வணிகத்தில் தங்கி வணிகத்தினாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.வணிகம் என்பது பொருட்களின் உற்பத்தியையும், அவ்வுற்பத்திகளைச் சந்தைப்படுத்தலும் ஏற்றுமதி செய்வதுமாகும்.
உற்பத்திகள் என்பன நாட்டுக்குத் தேவையான இராணுவத்தளபாடங்களிலிருந்து, உணவு, உடை,வீட்டுப் பாவனைப் பொருட்கள், அனைத்து வயதினருக்கும் பல்வேறு தேவைகளுக்காக தேவைப்படும் பொருட்கள், கணிணி உட்பட நவீன தொழிநுட்பப் பொருட்கள், கைத்தொலைபேசிகள் என பல்கிப்பெருகி நிற்கும் பொருட்களின் தேவைக்குள் மக்கள் தள்ளப்பட்ட நிலையில் தனது நாட்டு மக்களின் தேவைக்கான அத்தனை பொருட்களையும் உற்பத்தி செய்யக்கூடிய மூலப்பொருட்களோ அன்றி தன்கண்டுபிடிப்புகளான தொழில்நுட்பங்களோ இருந்தும் அவற்றை உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலைக்கு பலநாடுகள் முடங்கிக் கிடக்கின்றன.
தொழிலாள சங்கங்களைத் தூண்டிவிட்டு,பிள்ளைiயும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல தூதரகங்களின் அதிகாரிகள் போலச் செயல்படும் ஒற்றர்கள் செயல்படுவதனால் தொழிற்சாலை தொடர்ந்து பலநாட்களுக்கு மேலாக பொருட்களை உற்பத்தி செய்யாத போது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமலும், விலையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றன.
உற்பத்திப் பொருட்களுக்கான மூலப் பொருட்களை, தமது நாட்டிலிருந்தோ, அல்லது தமது நாட்டிலே அம்மூலப்பொருட்கள் கிடைக்காத போது வெளிநாட்டிலிருந்து அம்மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படுகின்றது.
மூலப்பொருட்களே உற்பத்தியை நிர்ணயிக்கின்றன.உளவு நிறுவனங்கள் தங்கள் ஒற்றர்கள் மூலமாக மூலப்பொருட்களை வழங்குவோரை அணுகி அம்மூலப்பொருட்களின் விலையை, தொழிற்சாலைகள் வாங்கத் தயங்கும் அளவுக்கு ஏற்றுவது அல்லது தரம்குறைந்த மூலப்பொருட்களை தொழிறசாலைகள் வாங்கச் செய்வதற்கான வேலையைச் செய்கின்றன.
ஒரு தொழிற்சாலையில் மூலப்பொருளை கொள்வனவு செய்வதற்கென்றே தனி அதிகாரி இருப்பார்,அவரை அணுகும் தூதரக ஒற்றர்கள் அவருக்கு பண ரீதியாகவோ அவரின் பலவீனம் அறிந்து வேறுவிதமாகவோ அதனைப் பூர்த்தி செய்து தமது சூழ்ச்சியை அரங்கேற்றி விடுவார்கள்.
தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் தரமான உற்பத்திகள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மூலப்பொருளினால் தயாரிக்கப்பட்ட பொருள் அதிகவிலையைக் கொண்டிருப்பதானால் பரந்துபட்ட மக்களால் அதனை வாங்க முடியாத நிலை தோன்றலாம், அல்லது தரமற்ற மூலப்பொருட்கள்; கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை தரமற்றவை என்ற காரணத்தினால் மக்கள் வாங்குவதைத் தவிர்ப்பார்கள்.
இந்த தவிர்ப்பானது வெளிநாட்டிலிருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்கின்ற நிலையை உருவாக்குகின்றது.
இந்த நிலையானது, தொழிற்சாலையை நம்பியிருக்கும் மக்களை சம்பளக் குறைப்பு, அல்லது பலரை வேலைநீக்கம் செய்தல் என்ற இக்கட்டான நிலையை தொழிற்சாலைகளுக்குத் தோற்றுவிக்கின்றன.
வேலை இல்லாத் திண்டாட்டம் நாட்டில் அரசியலையே மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டது.
தொடரும்
![]()