சங்கதிகள்

பள்ளியில் சேர்ந்தால் ரூ.1,000 பரிசு: அசத்துகிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!

பல்லடம் அருகே வீடு வீடாக சென்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ‘பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என, பிரசாரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கோவை மாவட்டம்,சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, லட்சுமணசாமி தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக, வீடு வீடாக பிரசாரம்செய்யும் இவர் கூறியதாவது:

இந்த ஊரில், 430 பேர் உள்ளனர். இதில், ஆரம்ப பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் மிக குறைவு. தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 13 பேர் மட்டுமே படிக்கின்றனர்.இங்கு, பணியில் இருந்த ஒரு ஆசிரியரும் பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார். தற்போது, நானே ஆசிரியர்; நானே தலைமை ஆசிரியர். இது சிறிய கிராமம் என்பதால் சேர்க்கை குறைவாக உள்ளது.

அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சியாக, ‘1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என, அறிவித்துள்ளேன். மாணவர்களை சேர்க்க முயற்சிப்பவருக்கும், இத்தொகையை வழங்குவேன்.கூடுதலாக ஓர் ஆசிரியர்மட்டும் இருந்தால், மாணவர்களை கவனிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Loading