நாய்களை திருடி விற்பனை செய்து வந்த 2 வாலிபர்கள் கைது…..

சேலத்தில் திருட்டுப்போன குட்டி நாய் 35 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது…..

சேலம் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, சின்னகொல்லப்பட்டி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் வளர்த்து வந்த லேபர்டா வகை ஜூலி பெயர் கொண்ட நாய், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி திருடுபோனது. இது தொடர்பாக அவர் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் அஸ்தம்பட்டி பகுதியில் திருட்டு போன நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சுவர்விளம்பரமும் செய்திருந்தார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்காடு அடிவாரம் கொல்லப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுவது குறித்து தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அந்த வழியாக வந்த நவீன் (25), சண்முகவேல்(22) ஆகிய இரண்டு இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அஸ்தம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் உயர்ரக நாய்களை இரவோடு இரவாக கடத்தி வந்து, தங்களது பண்ணையில் வைத்து அந்த நாய்களை இணை சேர்க்கவிட்டு அதன் மூலம் ஈனும் குட்டிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாய்களில் பிரவீன் என்பவரின் ஜூலி நாயை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *