தடுப்பூசி விவரத்தில் ஏமாற்றத் திட்டமிட்டதாகச் சந்தேகம் – குடும்பத்தாருடன் சீனப் புத்தாண்டைக் கழிக்க அனுமதி மறுப்பு

தனிநபர்களின் தடுப்பூசி விவரம் குறித்து ஏமாற்ற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்குக் குடும்பத்தாருடன் சீனப் புத்தாண்டைக் கழிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Healing the Divide எனும் அமைப்பைத் தோற்றுவித்த ஐரிஸ் கோவுக்கு (Iris Koh) பிணை வழங்கப்படமாட்டாது என்று நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நீதிமன்றம் நிபந்தனையை மீட்டுக்கொள்ளும்படியும் தடுப்புக்காவலிலிருந்து தம்மைத் தற்காலிகமாக விடுவிக்கும்படியும் கோ விண்ணப்பித்தார்.
இருப்பினும் தற்காலிகமாக விடுதலை அளிப்பதற்குச் சட்ட ரீதியான அடிப்படைக் காரணம் இல்லை என்று நீதிபதி வின்சென்ட் ஹூங் (Vincent Hoong) கூறினார்.
மாவட்ட நீதிபதியின் உத்தரவைத் திருத்துவதற்கான உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தனிநபர்கள் Sinopharm தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சிடம் பொய்த் தகவல் அளிக்க முயன்றதாக கோ மீதும் மருத்துவர் ஜிப்சன் குவா (Jipson Quah) மீதும் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும் குவாவுடன் அமைச்சை ஏமாற்றும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கோ மீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் எதிர்நோக்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவுக்கு 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
![]()