கவிதைகள்

பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா!… ( கவிதை ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும்
         எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார் 
         அல்லலினை அகற்றுவென அடியார்கள் வேண்டிடுவார் 
         நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார்  ! 
 
       
       தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும் 
        யார்யாரே வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார் 
        ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று
        தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம்  !
 
 
       காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும் 
       காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார்
       குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும்
       கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே  ! 
 
 
       வாய்கட்டு கைகட்டு  வயிற்றையும் கட்டென்றார் 
       வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் எனவுரைத்தார்
       எதையுமே கேட்காது எப்படியோ நாம்நடந்தோம்
        வாய்கட்டி கையட்டி வகையறியா நிற்கின்றோம்  ! 
 
 
       தேரேறி வருங்குமரா திருவருளைத் தந்திடுவாய் 
       ஊரெல்லாம் உனையணுகி உவந்தேற்ற விரும்புகிறார் 
       பேரரக்கர் பெருந்துயரை வேரோடு அழிந்தவனே 
       பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா  !
 
      நல்லூரான் தேர்காண நாளெண்ணிப் பலரிருந்தார்  
      நல்லூரில் பண்ணிசைக்க பலபேர்கள் காத்திருந்தார்  
     அத்தனையும் நிறைவேறா ஆக்கிவிட்ட  காலமதை 
      அகற்றிடுவாய் முருகையா அடிபணிந்து இறைஞ்சுகிறோம்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *