நல்லவர் யாருளர் சொல்வீரே!… சங்கர சுப்பிரமணியன்.

பூத்துக்குலுங்கும் பூக்கள் தந்து அப்பூக்களுக்குள் நற்சுவை தேனைவைத்து
தேனை நாடிவர தேனீக்களையும்
படைத்து
தேனீ மலரில் அமர்ந்து தேனுண்ணும் வேளையில்
மலரை சூல் கொள்ளச் செய்து
சூல்கொண்ட மலர் காயாகி கனியாகி
கனியிருக்கும் விதை மண்ணில்
விழுந்து
செடியாகி பூத்து குலுங்குகிறதே
பறவைகளும் விலங்குகளும் மண்ணில் பிறப்பெடுத்து
வளர்ந்து பெரிதாகி இயற்கையின் உந்தலால்
ஆணினம் பெண்ணையும் பெண்ணினம் ஆணையும் நாடி
கருவுற்று இனப்பெருக்கம் செய்கின்றன
விலங்கிற்கு பறவையோ பறவைக்கு விலங்கோ
இனப்பெருக்கில் இயற்கைக்கு முரணாக வருவதில்லை
பூமிவாழ் உயிரினங்கள் தாம் தோற்றுவித்த உயிர்கள் யாவும்
இயற்கையெனும் இறையருளால்
இனப்பெருக்காய் நிகழ்வதில்லையாம்
இப்புவியில் யாரோ எதுவோ செய்த வினைப்பயனாய்
புழுவன்றும் பூச்சியென்றும் விலங்கென்றும் பறவையென்றும்
மனிதரென்றும்
இப்புவியில் பிறப்பெடுக்கும் உயிர்கள்யாவும்
ஈன்றவர்க்கோ ஈன்றதற்கோ சொந்தமில்லை
ஆதலினால் மானிடரே
நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகள் யாவும்
நம் சொந்தமில்லையென அறிவீர்
கருத்தரிக்க வாய்ப்பில்லாதார்
செயற்கையிலே குழந்தைபெற
வாடகைதாய் இருப்பதுபோல்
வினைப்பயனாய்
மறுபிறவி எனும் செயல் நடந்தேற
இப்புவிவாழ் மனிதரெல்லாம்
வாடகைப் பெற்றொரே உணர்ந்திடுவீர்
இப்புவிவாழ் உயிரினங்கள் யாவும்
தாம் இனப்பெருக்கம் செய்வதல்லை
மறுபிறவி செயல்புரிய வாடகைத் தொழிலே செய்கின்றதாம்
இதெல்லாம் கற்பனையென்று சொன்னவரை இகழாதீர் மானிடரே
கற்று ஓதி தெளிவுபெற்று பகுத்தறிந்து பண்பானவர்கள்
சொன்னதனால்
கண்மூடி ஏற்றுக்கொண்டால் உம்போல நல்லவர் யாருளர் சொல்வீரே!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()