கவிதைகள்

வையத்தின் துயர்களைய வந்திடுவாய் ஆண்டவனே!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 நிலமீது உள்ளவர்கள் நிம்மதியாய் வாழ்வதற்கு
அளவற்ற ஆண்டவனே அருள்புரிய வேண்டுமையா
உளமுடைந்து உள்ளார்கள் பலபேர்கள் உய்வுபெற
அளவற்ற ஆண்டவனே அவர்பக்கம் பாருமையா  !
நோயென்னும் பெயராலே பேயொன்று வந்திருக்கு
தாயாக இருப்பவனே பேயழிய உதவிடுவாய்
வைத்தியனாய் வந்திருந்து மருத்துவமே பார்த்தவனே
வையத்தின் துயர்களைய வந்திடுவாய் ஆண்டவனே  !கல்லோடு கட்டியே கடிலிலே போட்டாலும்
தெப்பமாய் மாற்றியே திருவருளைத் தந்திடுவாய்
பொல்லாத நோயாலே பொசுங்கிறார் மாநிலத்தில்
வல்லவனே நல்லருளை தந்திடுவாய் மக்களுக்கு   !

மருந்துகாண முடியாமல்  மருத்துவர்கள்  திணறுகிறார்
பாலருந்தும்  பசுங்குழந்தை  நோய்கண்டு  மடிகின்றார்
மார்க்கண்டை  யமன்பிடிக்க காலாலே  உதைத்தவனே
மாநிலத்தை  பிடிக்கும்யமன்   மாண்டுவிடச்  செய்துவிடு  !

 
       ஆணவத்தை விட்டகலா மானிடர்கள் இருக்கின்றார்
       அவராலே மக்கள்பலர் அல்லலினை அடைகின்றார் 
       நோயோடு ஆணவமும் கைகோர்த்து அழிக்கிறதே
       நுண்ணறிவே நுண்ணுணர்வே நோக்கிடுவாய் திருப்பார்வை  ! 
 
       படைத்தவனே பரம்பொருளே பாருலைகைப் பாரையா
       பலர்மடிந்தும் பலரழுதும் பார்சிதறிக் கிடக்கிறது 
       மருத்துவத்தைத் தலைகுனிய வைத்திருக்கு கொரனோவும் 
       மாமருந்தாய் இருப்பவனே நீயருளல் வேண்டுமையா  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *