கவிதைகள்
ஆபத்து எமைநோக்கி ஆலவட்டம் விரிக்கிறதே!… கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மதுகுடித்தல் புகைபிடித்தல் இப்போது அவசியமா
மனம்முழுக்க கொரனோவை எண்ணியெண்ணி துடிக்கின்றோம்
மதுகுடித்தால் கொரனோவை எதிர்த்திடலாம் எனுமெண்ணம்
மரணவாசல் கூட்டிச்செல்ல வழியாகும் எனவுணர்வோம் !
அரிசியை வாங்கிடுவோம் பருப்பையும் வாங்கிடுவோம்
அவசியமாய் தேவைப்படும் அனைத்தையுமே வாங்கிடுவோம்
அபின்கஞ்சா இப்போது அவசியமா அறிவிலிகாள்
ஆபத்து எமைநோக்கி ஆலவட்டம் விரிக்கிறதே !
அவசரமாய் செய்திகளை அனுப்புகின்ற வேளைதனில்
அலட்சியமாய் செய்திகளை அனுப்பிவைத்தல் அவசியமா
அரக்கனென கொரனோவோ அழிக்கவரும் வேளையிலே
அசிங்கமாய் கருத்துப்பட அனுப்பிநிற்றல் அவசியமா. !
கேலிகிண்டல் செய்கின்றார் கிறுக்குத்தனம் உகந்ததல்ல
கிலிபிடித்து மக்களெலாம் கொரனோவால் மருளுகிறார்
ஆறுதலாய் தேறுதலாய் அவதிநிலை தனையுணர்ந்து
அறிவுடனே செயற்படலே ஆத்மார்த்த கடமையன்றோ !
மதவாதம் இனவாதம் பேசுவதை விடவேண்டும்
மனிதமனம் எல்லாமே புனிதவுணர் வெழவேண்டும்
துன்பமுறும் யாவரதும் துயர்துடைக்க நினைப்பதுவே
நன்மைதரும் எனவெண்ணி நாம்செயலாய் ஆற்றிடுவோம் !
கொரனோவை அரசியலாய் ஆக்கிவிடல் முறையல்ல
அறநெறியை அகமிருத்தி அரசுசெயற் படவேண்டும்
நாட்டுமக்கள் நலன்பெறலே நல்லரசின் இலட்சணமாம்
வாட்டிநிற்கும் கொரனோவை வாய்ப்பாக்கல் அவசியமா !
![]()