பலதும் பத்தும்

விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு!

உலகளாவிய வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் வேளையில், அங்கு தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த தகவலை சீன அறிவியல் அகடமியின் ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் ‘கிரேஸ்’ செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டு ‘நேச்சர்’ இதழில் வெளியிட்டுள்ளனர்.

 

இயற்கையாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த வெப்பமண்டலக் கடல் நிகழ்வு, அண்டார்டிகாவின் காலநிலையைத் தூரத்திலிருந்து கட்டுப்படுத்தும் ஒரு ‘ரெகுலேட்டர்’ போலச் செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

 

இதற்கமைய, அண்டார்டிகாவில் தற்காலிகமாக அதிகரித்த இந்த பனி, விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

கடந்த 2021 முதல் 2023 வரையிலான 22 மாத காலகட்டத்தில் இந்த வியப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

பூமத்திய ரேகைக்கு அருகில், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் சந்திக்கும் வெப்பமண்டல கடல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம் தான், அண்டார்டிகாவில் பனி அதிகரித்ததற்கான விசித்திரமான முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

அங்கு நிலவிய தீவிர வெப்பம் காரணமாக வளிமண்டல காற்றில் பெரும் சுழற்சி மாற்றம் ஏற்பட்டு, ‘வளிமண்டல ஆறுகள்’ போன்ற ஈரப்பதம் மிக்க காற்று அண்டார்டிகாவை நோக்கி திருப்பப்பட்டது.

 

இந்த ஈரப்பதம் கிழக்கு அண்டார்டிகா பகுதியில் தீவிர பனிப்பொழிவை ஏற்படுத்தியதால் பனியின் அளவு வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இந்த பனி அதிகரிப்பு அண்டார்டிகாவின் நீண்ட கால பனிச் சரிவைத் தடுக்காது என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

கடந்த 20 ஆண்டுகளில், அண்டார்டிகா ஆண்டுக்கு சராசரியாக 140.5 பில்லியன் டன் பனியை இழந்து வந்துள்ளது.

 

இந்த தற்காலிக உயர்வு உலக கடல் மட்ட உயர்வை வருடத்திற்கு 0.3 மில்லிமீட்டர் என்ற அளவில் தற்காலிகமாக குறைத்துள்ளதே தவிர, புவி வெப்பமயமாதலின் ஆபத்து இன்னும் குறையவில்லை என அண்டார்டிகா மற்றும் தெற்கு பெருங்கடல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *