அடுத்த 10 ஆண்டுகளில் AI கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான மனிதர்களின் கட்டுப்பாடு இழக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைந்தது 10 சதவீதம் இருப்பதாக அமெரிக்காவின் தற்போதைய மற்றும் முன்னாள் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளில் பெரும்பாலானோர் கருதுவதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
2026 ஏப்ரல் 30 முதல் ஜூலை 15 வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய 111 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
செப்டம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் தேசியப் பாதுகாப்பின் எதிர்காலம்’ என்ற அறிக்கையில், முக்கியமான எச்சரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயல்படும் வாய்ப்பு 10 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என 87 சதவீத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், AI மீதான மனிதர்களின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற முடியாத நிலை உருவாகும் சாத்தியம் குறித்து கேட்கப்பட்டபோது, 33 சதவீதம் பேர் அத்தகைய நிலை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பில் AI – வாய்ப்புகளும் அபாயங்களும்
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 47 சதவீதம் பேர் அமெரிக்கப் போர்த் துறையில் தற்போது பணியாற்றுபவர்கள் அல்லது முன்னர் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களில் கணிசமானோர் அமெரிக்க வெளியுறவுத் துறை, ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகம் மற்றும் CIA உள்ளிட்ட உளவுத்துறை அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.
AI வழங்கக்கூடிய வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களைப் பெறும் நேரத்தை AI கணிசமாகக் குறைக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.
இராணுவத் துறையைப் பொறுத்தவரை, 73 சதவீதம் பேர் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய கருவியாக AI இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், 61 சதவீதம் பேர் எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கணிப்பதற்கு AI பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
இதனிடையே, மனிதக் கட்டளைக்கு அப்பாற்பட்டு முடிவெடுக்கும் செயல்முறைகளை AI துரிதப்படுத்துவது மிகப்பெரிய இராணுவ அபாயமாகக் கருதப்பட்டுள்ளது.
அதேவேளையில், இணையப் பாதுகாப்பு மற்றும் முடிவெடுப்பதற்கான ஆதரவு ஆகியவை AI வழங்கக்கூடிய மிகப்பெரிய இராணுவ வாய்ப்புகளாக நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளன.
AI – அமெரிக்கா, சீனா மோதலை அதிகரிக்குமா?
AI தொடர்பான பொதுவான அபாயங்கள் குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், 54 சதவீதம் பேர் AI பயன்பாடு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடையும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
மக்கள் தங்களது முடிவெடுக்கும் திறனை AI அமைப்புகளிடம் அதிகளவில் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய ‘அறிவாற்றல் சார்ந்த அதிகப்படியான சார்புநிலை’ குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
AGI மற்றும் செயற்கை மீ-நுண்ணறிவு
மனிதர்களின் அறிவாற்றலுக்கு இணையான அல்லது அதனை விஞ்சக்கூடிய திறன் கொண்ட செயற்கை பொது நுண்ணறிவு (AGI) 2032 ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கு அடுத்த சுமார் ஐந்து ஆண்டுகளில், அனைத்து அறிவாற்றல் துறைகளிலும் மனிதர்களை விஞ்சக்கூடிய கோட்பாட்டு ரீதியான செயற்கை மீ-நுண்ணறிவு (Artificial Superintelligence) உருவாகக்கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கட்டுப்பாட்டை மீறிய AI சம்பவங்கள் அதிகரிப்பு
இந்நிலையில், அண்மைய வாரங்களில் சில AI முகவர்கள் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைச் சூழல்களின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம், OpenAI-யின் ஒரு AI முகவர் தனது பணியை நிறைவேற்றுவதற்காக தொழில்நுட்ப நிறுவனமான Hugging Face-ஐ ஹேக் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவத்தை OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் “தீவிரமான பாதுகாப்புச் சம்பவம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இருதரப்பு ஆதரவுடன் ‘Kill Switch’ சட்டமூலத்தை முன்வைத்தனர்.
அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், கட்டுப்பாட்டை மீறி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் AI முகவர் அல்லது மாதிரியைச் செயலிழக்கச் செய்ய உத்தரவிடும் அதிகாரம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்படலாம்.
இதேவேளை, Anthropic நிறுவனத்தின் Claude AI மாதிரிகளில் ஒன்று மூன்று நிறுவனங்களை ஹேக் செய்ததாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது.
மேலும், இங்கிலாந்தைச் சேர்ந்த Loss of Control Observatory வெளியிட்ட சமீபத்திய அறிக்கையும் AI கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்தின் AI Security Institute (AISI) நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கண்காணிப்பு அமைப்பு, 2025 நவம்பர் முதல் X சமூக ஊடகத் தளத்தில் AI பயனர்கள் பதிவு செய்யும் சம்பவங்களை கண்காணித்து வருகிறது.
அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் AI கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக 300க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், AI தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன் அதன் பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும் அரசாங்கங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
![]()