பலதும் பத்தும்

வரலாற்றிலேயே உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மையம் வெளியிட்ட தகவலின்படி, ஓகஸ்ட் மாதத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்தை விட 1.5°C அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் உலகெங்கிலும் கடுமையான காலநிலை மாற்றங்களும் பேரழிவுகளும் பதிவாகின. நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்தோனேசியா முதல் கிரீஸ் மற்றும் பெல்ஜியம் வரை காட்டுத்தீ பரவியதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.

2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக சுமார் 200 நாடுகள் முயற்சிப்பதாக உறுதியளித்த வரம்பானது, பல தசாப்தகால சராசரியாக அளவிடப்படும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாகும்.

2025 நவம்பர் மாதத்திற்குப் பிறகு, உலகின் சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய கால அளவை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிய முதல் மாதமாக ஓகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.

உலகளாவிய மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, கடந்த மாதமானது 2023 ஜூலை மாதத்துடன் இணைந்து வரலாற்றில் உலகின் மிக வெப்பமான மாதமாகச் சமநிலையைப் பெற்றுள்ளது.

மனிதர்கள் தொழில் ரீதியாக எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை எரிக்கத் தொடங்குவதற்கு முன், அதாவது 19 ஆம் நூற்றாண்டில் பூமியில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட இது 1.65 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

இந்த புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் உமிழ்வே காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.

பூமியின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகளைத் தவிர்த்து, ஏனைய கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக கோபர்நிகஸ் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *