135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் – வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அதிரடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
குறித்த காணி தொடர்பான பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் உறுதி ஆவண இலக்கம் மற்றும் வரைபட இலக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காமந்த துஷார தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காணியில் 1918ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பங்களா தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
. இந்நிலையில், முறைப்பாட்டாளரான காமந்த துஷார தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த 135 ஏக்கர் காணி தொடர்பான விசாரணையை குற்றத்திலிருந்து உருவான சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) முன்னெடுத்து வருகிறது.
![]()