பலதும் பத்தும்

இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம் – உயிருடன் வீடு திரும்பிய பெண்!

லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 ஆம் திகதி ஐ.ஐ.எம் வீதிக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். அதைத் தொடர்ந்து, அந்த உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் பைன்சாகுண்ட் மயானத்தில் தகனமும் செய்தனர்.

உடலை அடையாளம் காட்டிய கையோடு, ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் பொலிஸார் வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலின் அடையாளம் உறுதியாகத் தெரியாததால், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் பின்னரே வெளிவந்தன. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.

இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த 05 ஆம் திகதி ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் பொலிஸாரும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பலமுறை வீட்டிற்குத் திரும்புமாறு ஜாவேத் அறிவுறுத்தியும், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வீடு திரும்பியுள்ளார்.

ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஷிவானி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்தினார்களா என்பது குறித்து நீதிபதி முன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், லக்னோ பொலிஸாருக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு ஷிவானி என நம்பி குடும்பத்தினரால் எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் பொலிஸார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *