பலதும் பத்தும்

சிக்கன் துண்டுக்காக நண்பரை கொலை செய்த வாலிபர்!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலையை மறைக்க முயன்ற வாலிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் சீதாராம் மற்றும் அருண்குமார். அவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். வாராந்திர விடுமுறை நாளான நேற்று (30), அவர்கள் தங்கியிருந்த அறையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, சீதாராம் தன்னை விட அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டதால் அருண்குமார் கோபமடைந்தார். மது போதையில் இருந்த 2 பேருக்கும் இடையே “யார் அதிக சிக்கன் பீஸ் சாப்பிடுவது” என்பதில் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியது.

ஆத்திரமடைந்த அருண்குமார், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலையை விபத்தாக மறைக்க திட்டமிட்ட அருண்குமார், சீதாராமின் உடலை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். அங்கு, சீதாராம் “வெல்டிங் வேலை செய்யும்போது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்” என்று வைத்தியர்களிடம் பொய் கூறி நாடகமாடினார்.

இருப்பினும், சீதாராமின் நெஞ்சில் இருந்த ஆழமான கத்திக் குத்து காயத்தைப் பார்த்த வைத்திய ஊழியர்கள், கடாபிரபா பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சிக்கன் பீஸ் சண்டைக்காக தன் நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதை அருண்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பொலிஸார், அருண்குமாரைக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button