கொழும்பை சார்ந்திருக்க வைக்க வடக்கில் அரசின் இரகசியத் திட்டம்!

வடக்கு மாகாணம் எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரகசியமாக விரும்புகிறது என குற்றஞ்சாட்டிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இது அப்பட்டமான பாசாங்குத்தனம் என்றார்.
காங்கேசன்துறை துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தையும் இன்னுமொரு மத்தளை விமான நிலையமாகவும் இன்னுமொரு அம்பாந்தோட்டை துறைமுகமாகவும் உருவாக்க இயலாது என
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
மேலும் அந்த பதிவில், வடக்கு மாகாணத்திலுள்ள மிகச்சிறந்த பொருளாதார மையங்கள் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகும்.
இந்த இரண்டு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களையும், உற்பத்தித் திறனற்ற மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக திட்டங்களுடன் மறைமுகமாக ஒப்பிடுவது, இனவெறிச் செயல் அல்லது முட்டாள்தனமானதாகும்.
நீங்கள் உங்களை இனவெறிக்கு எதிரான போராளி என்று கூறிக்கொள்கிறீர்கள், ஆனால் வடக்கு மாகாணம் எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்று இரகசியமாக விரும்புகிறீர்கள். இது அப்பட்டமான பாசாங்குத்தனம்.
இந்திய அரசு நிதியுதவி வழங்கத் தயாராக இருக்கும்போது பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தி, வடக்கையும் இலங்கையையும் உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டுடன் இணைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உதவ வேண்டும் – என்றார்.
![]()