இலங்கை

பூநகரி, கிராஞ்சியில் இரவு நேரத்தில் இரகசியமாக கண்காணிப்புக் கோபுரம் அமைக்க முயற்சி!

கிளிநொச்சி, பூநகரி – கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளையில் வாகனங்களில் வந்த சிலர், இரகசியமாக கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடி அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கிராஞ்சி–பொன்னாவெளி ஊடாக சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை மின் திட்டமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் பிரதேசத்தைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரது தகவலின்படி, குறித்த பகுதியில் 34 காற்றாலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இரவு வேளையில் வாகனமொன்றில் வந்த சிலர் எருமை தீவு பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிராம மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது, வாகனமொன்றில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் தங்குவதற்காக நிழல் கொட்டகையொன்றை அமைத்துக் கொண்டிருந்ததாக அந்தப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் விசாரித்தபோது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து கண்காணிப்பதற்கும் தகவல்களை வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக வந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காற்றாலை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவித்து, அங்கிருந்த பொருட்களை அகற்றுமாறு மக்கள் கோரிய நிலையில், குறித்த நபர்கள் தாங்கள் வெளியேறுவதாகத் தெரிவித்து அங்கிருந்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோது, இதுகுறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த காற்றாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் வரை நேரடியாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில், காற்றாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 12 இடங்களில் சுமார் 7,000 தென்னங்கன்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் சுமார் 165 மீற்றர் எனவும், ஒரு காற்றாலையை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி தேவைப்படும் எனவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளின்போது அதிகளவு சீமெந்து பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் அப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காற்றாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வயல் நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடிநீர் கிணறுகள் உள்ளிட்ட மக்களின் முக்கிய வளங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் வாழும் வளமான பகுதிகளை பாதிக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக, மாற்றுக் காணிகளை தெரிவு செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பையும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்திற்கொண்டு, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளதாகவும் பொது அமைப்பின் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button