ஜனாதிபதியின் உத்தரவைக் குழப்ப சுமந்திரன் முயற்சி; அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டு

வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், சுமந்திரன் கொழும்பில் போராட மக்களை அழைப்பது கபடத்தனமான அரசியல் என அமைச்சர் இ.சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துளள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.
அண்மையில் வலி. வடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன்வைத்ததாக அறிந்தேன்.
அதாவது வலி வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை கொழும்பு ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த வாரம், வலி வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன் கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்குரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.
யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மக்களுடைய காணிகளை விடுவிப்பார் எனவும் தெரிவித்தார்.
![]()