இலங்கை

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நீண்டகால இன மோதல்கள் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான அழிவுகரமான அனுபவங்களின் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும், மீண்டும் எவ்வித இன மோதல்களும் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது எனத் தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

முன்னர் செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்ட முறையில் செயற்படுத்தப்படுவதாகச் சமூகத்தில் ஒரு கருத்து நிலவிய போதிலும், நாட்டை கட்டியெழுப்புவதன் மிக முக்கிய பகுதியாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி வருவதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்துடனான அனைத்து முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி முறையில் மேற்கொள்ளக்கூடிய அமைப்பொன்றை அறிமுகப்படுத்தி, அரச சேவையை மேலும் கவர்ச்சிகரமான தொழிற்துறையாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாமும் அரசாங்கமும் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தினாலும் மக்களுக்குத் தீங்கு ஏற்பட இடமளிக்க மாட்டோம் என மேலும் உறுதியளித்த ஜனாதிபதி, வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை விரைவுபடுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதையே எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தீர்மானங்களை எடுக்கும் போது சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் அது ஆராயப்படுவதால், சிறிய சிறிய முரண்பாடுகள் எழுந்தாலும் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

நமது நீதி வழங்கும் நிறுவனங்களில் ஒரு பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது.

2006 ஆம் ஆண்டின் வழக்கிற்குத் தீர்ப்பு 2026 ஆம் ஆண்டில்தான் கிடைக்கிறது. 2017 ஆம் ஆண்டின் ஒரு வழக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒரு சாட்சியத்தைக் கூடப் பெறவில்லை என்றால், எப்போதுதான் மக்கள் நீதியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்? அந்த நம்பிக்கை உருவாகப்போவதில்லை.

எனவே இந்தச் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக பல நிறுவனங்களைப் பலப்படுத்த வேண்டும்.

நமது குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம்.

அதேபோல் நீதிமன்றக் கட்டமைப்பு ஆகிய இவை அனைத்தையும் செயற்திறனுடன் செயல்பட வைத்து, தேவையான சட்டங்களை இயற்றி, சட்டப் பாதுகாப்பையும் செயற்திறனுடன் செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், மனித வளத்தையும் வழங்குவதன் மூலமே இவற்றை செயற்திறனுள்ளதாக மாற்ற முடியும்.

அதற்காக நாம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் நமது அரசாங்கம் நம்பிக்கை வைப்பது இந்த நாட்டின் மக்கள் பலத்தின் மீதே ஆகும்.

யார் எந்த வகையில் சிறிய சிறிய எதிர்ப்புகளைக் காட்டினாலும்,மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் பின்னோக்கிப் பெறப்பட மாட்டாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.

பின்வாங்கப் போவதில்லை. ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது வரக்கூடிய நன்மைகள், தீமைகள்,ஏனைய புறக் காரணிகள் என அனைத்தையும் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாகவே ஆராய்வோம்.

ஆனால் தீர்மானம் எடுத்த பிறகு,பின்னோக்கிப் போவதில்லை என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.அது நமது நாட்டிற்கு அவசியமானது.

அதேபோல் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை மாற்றுவதற்கும் நாம் எந்த வகையிலும் தயங்கப் போவதில்லை.

எப்போதும் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் இது.

நபிகள் நாயகம் அவர்களின் இந்த பிறந்த நாளில், அவரது போதனைகள் மற்றும் இறுதி உரையின் அர்த்தத்தையும், அதிலுள்ள அமைதி பற்றிய எதிர்பார்ப்பையும், அதில் இருந்த மனிதநேயம் பற்றிய நம்பிக்கையையும்,அதில் இருந்த பொருளாதாரம் மற்றும் வறுமை பற்றிய பார்வையையும் இவை அனைத்தையும் யதார்த்தமாக்குவதற்குத் தேவையான ஒரு ஆட்சியை நாம் இணைந்து உருவாக்கியுள்ளோம்.

இத்தகைய ஆட்சி உங்களது ஆதரவுடனும் உங்களது பலத்துடனும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button