இலங்கை

சுரேஷ் சலேவுக்கு எதிரான நடவடிக்கை சட்டவிரோதமானது: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ள நிலையில், இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையும் இந்த 180 நாள் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தடுப்புக் காவல் உத்தரவின்றி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவ்வாறு செய்தால் விசாரணைகளுக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

180 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமலும், நீதிமன்ற நடவடிக்கை தொடங்கப்படாமலும் இருந்தால், அவரை விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு நாமும் வலியுறுத்துகிறோம்.

சஹ்ரான் மற்றும் நௌஃபர் மௌலவி இணைந்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறித்து 2015 முதலே குற்றப்புலனாய்வுத் துறை (CID) அறிந்திருந்தது.

தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வனாத்தவில்லுவில் 100 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன; மாவத்தகமவில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இந்திய உளவுத்துறையும் எச்சரித்தது.

இவை அனைத்தையும் அறிந்திருந்தும் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2016 முதல் 2019 டிசம்பர் வரை மலேசியா மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த சுரேஷ் சலேவை எந்த அடிப்படையில் கைது செய்தனர் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட 7 உள்நாட்டுக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், 2 ஆண்டுகள் ஆய்வு செய்த எஃப்பிஐ (FBI) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது ‘ஐஎஸ்ஐஎஸ்’ (ISIS) தாக்குதல் என்றே முடிவுக்கு வந்தன; அவற்றுள்ளும் சலேவின் பெயர் இடம்பெறவில்லை.

சேனல் 4 (Channel 4) ஊடகத்திற்கு எல்.டி.டி.ஈ முன்னாள் உறுப்பினரான அசாத் மௌலானா அளித்த பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ) மனுவுக்கு எதிராக பேராயர் கார்டினல் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். தாக்குதல் நடந்த போது சலே அரச புலனாய்வுத் தலைவராக இருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையிலேயே பேராயர் அதனைச் செய்துள்ளார்.

நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்க பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி கவலையளிக்கிறது என சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button