மக்களிடையே போகச் செய்வதற்காக ஜனாதிபதியை வீதிக்கு இறக்கியது முதல் வெற்றி; நாமல் ராஜபக்ஷ பெருமிதம்

கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்த ஜனாதிபதியை வீதிக்கு இறக்கி, மக்களிடையே போகச் செய்துள்ளதாகவும், இது எதிர்க்கட்சியாக நாங்கள் பெற்ற முதல் வெற்றி என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புற அரசியலில் ஈடுபடவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்படும் ஆதரவாளர்களை வழிநடத்த உங்களுக்கு பொறுப்பு உள்ளது. ஆனால், எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் வேறு திசையில் செல்வது போலவும், தங்களை ஒதுக்கி வைப்பது போலவும் உணர்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர் கூறுகையில்,
நாங்கள் மக்களுடன் இணைந்து பணிகளைத் தொடர்கிறோம். இன்று நாங்கள் கிராமங்களுக்குச் சென்று இயங்குவதால், ஜனாதிபதியும் கிராமங்களை நோக்கி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்த ஜனாதிபதியை வீதிக்கு இறக்கி, மக்களிடையே போகச் செய்தமையானது எதிர்க்கட்சியாக நாங்கள் பெற்ற முதல் வெற்றியாகும்.
இவர் சட்டத்தரணிகள் சங்கக் கூட்டங்களில் பேசுவது போலத் தனியாகப் பேசிவிட்டுத் திரும்புவது அரசியலல்ல, ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.
இதேவேளை பாராளுமன்றத்தில் சிறிய குழுவாக இருந்தாலும், நாட்டு மக்களின் இதயங்களில் நாங்கள் பெரிய இடத்தை வகிக்கிறோம். நான் யாருடைய வாய்ப்பையும் பறிக்கவில்லை, யாரிடமும் வாய்ப்பு கேட்கவும் இல்லை. மக்களுடன் சேர்ந்து எங்கள் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.
![]()