உலகம்

அமெரிக்க விசா கட்டணம் உச்சம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அதிரடி!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான புதிய விதப்புரை ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம்   வெளியிட்டுள்ளது.

 

ஜனாதிபதி டிரம்பினால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இந்தக் கட்டண உயர்வை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது.

 

தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான செலவு இதன் மூலம் மிக அதிகளவில் உயரும்.

 

முன்னதாக, மத்திய நீதிபதி ஒருவர் இந்தக் கட்டண உயர்வு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்து, அதை வசூலிப்பதிலிருந்து டிரம்ப் நிர்வாகத்தைத் தடுத்திருந்தார்.

 

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி டிரம்பின் இந்த உத்தரவு, பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகவுள்ளது.

 

எனினும், அதனை உறுதிப்படுத்தி விதிகளை ஒப்புக்கொள்ளுமாறு அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்தால் முன்மொழியப்பட்ட 103,265 டொலர் கட்டணம் இன்று ஃபெடரல் பதிவேடு வாயிலாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (25) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

 

அத்துடன் 30 நாட்கள் கொண்ட பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் கால அவகாசம் ஆரம்பமாவதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சட்டம் இறுதி ஒப்புதலைப் பெறக்கூடும்.

 

சிறப்புத் துறைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதற்காக H-1B திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 65,000 விசாக்களும், உயர் பட்டதாரிகளுக்காக மேலும் 20,000 விசாக்களும் 3 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கு வழங்கப்படுகின்றன.

 

முன்னர் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 2,000 முதல் 5,000 டொலர்கள் வரை இருந்த இந்த விசா கட்டணம், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இவ்வாறு பாரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

 

அமெரிக்க ஊழியர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்கள் இந்த H-1B திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவிக்கிறார்.

 

எனினும், தகுதியான அமெரிக்க ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கும், சிறந்த திறமையாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கும் இந்த விசா திட்டம் மிகவும் அவசியமானது என வர்த்தகச் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button