இலங்கை

மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் – 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வாக்குமூலம் பதிவு
இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது.

எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button