பலதும் பத்தும்

ஐபோன் கேட்டு அடம்பிடித்த மகன்: குடும்பமே பலியான சோகம்!

புதிய ஐபோன் தொலைபேசியைப் பெற்றுத் தருமாறு கோரி ஆரம்பமான குடும்பத் தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாக உயிரிழப்பதில் நிறைவடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகர், சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான முரளிதர் சாந்த்குடே (48) என்பவரது 19 வயது மகனான குணால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், அருகில் உள்ள சுமார் 500 அடி உயரமுள்ள கவ்டா மலைப் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும், வாளுஜ் எம்பிசி பொலிஸாரும் மற்றும் கிராம மக்களும் மலையின் கீழே பாதுகாப்பு வலைகளை அமைத்து அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

 

சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தந்தை முரளிதர் மகனைச் சமாதானப்படுத்தி மீட்க அருகில் சென்றுள்ளார்.

 

அப்போது குணால் மலையிலிருந்து கீழே குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் சேர்த்து மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

கண்முன்னே கணவனும் மகனும் 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான கோரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதா, கடுமையான மன உளைச்சலில் அதே இடத்தில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சடலங்களைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button