நள்ளிரவில் லொறிகளில் கொண்டு வரப்பட்டு நெடுங்கேணிப் பகுதியில் இறக்கப்பட்ட யானைகள்; தமிழ் மக்களை விரட்டும் முயற்சியா எனக் கேள்வி

வவுனியா வடக்கு, நெடுங்கேணி – குளவிசுட்டான் கிராமத்துக்குச் செல்லும் குறிசுட்டகுளம் சந்தியில், பெரிய லொறிகளில் நள்ளிரவு நேரத்தில் கொண்டுவரப்பட்ட யானைகள் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இது இது இந்தப் பிரதேசங்களிலிருந்து தமிழ் மக்களை விரட்டும் நோக்கம் கொண்டது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் யானைகளுடன் சேர்த்து பெருமளவிலான கரும்புத்தடிகளும் அந்தச் சந்தியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அந்த விவசாயியின் இறுதிக்கிரியைகள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், மீண்டும் அதே பகுதியில் லொறிகளில் யானைகள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளமை அந்தப் பிரதேச மக்களையும் விவசாயிகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் தமது விவசாய நிலங்களையும் உயிர்களையும் பாதுகாக்கப் போராடி வரும் நிலையில், திட்டமிட்டு யானைகள் இங்கு இறக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
“எங்கள் பகுதியில் யானை தாக்குதலால் ஒரு விவசாயி பலியான சோகம் இன்னும் ஆறவில்லை. அதற்குள் மீண்டும் யானைகள் கொண்டுவந்து இறக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது வாழ்வாதாரமும் உயிரும் கேள்விக்குறியாகியுள்ளது.தமிழ் மக்களை இந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டும் நோக்கம் கொண்டது” எனவும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, கள நிலவரத்தை நேரில் ஆராய வேண்டும் என்றும், அச்சத்தில் இருக்கும் பொதுமக்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு உரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()