இலங்கை

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள் வாய் திறப்பார்கள் – மனோ கணேசன்

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்கள் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

கல்முனை சீருடைப் பிரச்சினை குறித்து கேசரிக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எல்லா இன மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி இருக்கிறார். 159 பேரைக் கொண்ட பாராளுமன்ற பெரும்பான்மை இருக்கிறது. இது இரண்டும் சேர்ந்தது தான் அரசு தரப்பாகும். இதற்கு மேல், அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர், தமிழ் பேசும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இருக்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்ததுதான் அரசாங்கமாகும். இத்தகைய அரசு தரப்பும் அரசாங்கமும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி நினைக்கிறதா?

இந்த அரசாங்கத்திடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொடர்புள்ள அனைவரையும் மாவட்ட செயலகத்தில் கூட்டி, சுகாதார அமைச்சர் ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய ஒரு பிரச்சினை தான் இந்த கல்முனை சீருடைப் பிரச்சினையாகும்.

இதைச் சரியாகச் செய்யாமல், தமிழ் பேசும் தரப்புகள் சமூக வலைத்தளங்களில் அடித்துக் கொண்டு நாறட்டும், மடியட்டும் என ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் சுமார் 10 நாட்களாகக் காலத்தைக் கடத்திவிட்டு, இப்போது தற்காலிக தீர்வு என்ற ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இத்தகைய ஒரு தற்காலிக நடவடிக்கைக்குக் கூட ஏன் இத்தனை தாமதம் ஏற்பட்டது? இதற்குள் எதிரணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்தது ஒரு புறமிருக்க, ஆளுங்கட்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?

உண்மையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியே தத்தமது ஈழத்து, மலையக, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் போலி வாய்ச்சவடால் அடிக்கிறார்களே தவிர, உள்ளே சாப்பிட மட்டும் தான் வாயைத் திறக்கிறார்கள் என்ற உண்மையும், அரசாங்க அதிகார மையத்தின் பக்கத்தில் கூட இவர்கள் எவருமே இல்லை என்ற நிதர்சனமும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இதற்குள் நாம் இலங்கையர் என்ற வெற்றுச் சமத்துவக் கோஷம் வேறு எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே உண்மையான சமத்துவம் ஏற்படும். இதுவே மறுக்க முடியாத உண்மையாகும். நான் அமைச்சராக இருந்த காலத்தில், அடிக்கடி அமைச்சரவையில் எழுப்பிய கூச்சல், மேசையில் அடித்த அடி, போட்ட சண்டைகள் என்பன இப்போது எனது ஞாபகத்துக்கு வந்து போகின்றன எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button