வரலாற்றிலேயே அதிக மனுக்களால் சவாலுக்கு உள்ளாகும் அரசியலமைப்புத் திருத்தம் 22 ஆவது திருத்தம்

வரலாற்றிலேயே அதிகளவிலான மனுக்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தமாக இந்த 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில திட்டவட்டமாக தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் காணப்படும் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதைப் பார்ப்பதற்காகவே எமது மனுவை தாக்கல் செய்வதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தினோம். எதிர்வரும் இரண்டு வாரங்களில் இன்னும் ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம்.
வரலாற்றில் இல்லாதவாறு தமக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நினைத்துக் கொள்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமான ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு 100க்கு 75 சதவீதம் என்றே கூறுகின்றன. யுத்த வெற்றியை ஈட்டித்தந்த மகிந்த ராஜபக்சவுக்கு கூட இவ்வாறான மக்கள் ஆதரவு நிலவியதில்லை. எனவே, தங்களது மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கும், எதிர்க்கட்சியினரை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் இந்த சீர்திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு விடும் என நாம் எதிர்பார்த்தோம்.
அரசியலமைப்பில் மக்களின் இறையாண்மை குறித்துக் கூறப்பட்டுள்ள 3ஆவது பிரிவை மீறும் வகையில் இச்சீரமைப்பு அமைந்துள்ளதாக 2022ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு தீர்ப்பில், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றைய தீர்ப்பில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான விடயம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை என்ற உப பிரிவின் கீழ் வருவதால், நீதிபதிகளின் வயதை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் இறையாண்மையை பாதிக்கும் என்றும், அது மக்கள் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 1610ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக இருந்த சர் எட்வர்ட் கோக், ‘ஒருவர் தனது சொந்த வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது’ என்ற உலகளாவிய கோட்பாட்டை முன்வைத்தார். தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் பயனடைபவராக உயர் நீதிமன்றமே காணப்படுகிறது. அதே உயர் நீதிமன்றமே இது தொடர்பில் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான உலகளாவிய கோட்பாட்டின் படி, உங்களால் உங்கள் வழக்கை நீங்களே விசாரிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்துக்கும் மேலாக உள்ள மக்கள் தீர்ப்புக்கு இதனை அனுப்பி வைக்குமாறு கோருகிறோம். மக்கள் தங்களது முடிவை வாக்கெடுப்பு மூலம் வெளிப்படுத்துவார்கள்.
உண்மையில், அமைச்சரவை இந்த 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்ட போதே, இது மக்கள் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு சட்டமூலம் என சான்றளித்திருக்க வேண்டும். அவ்வாறு அமைச்சரவை சான்றளித்திருந்தால், நாம் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் இதனை மக்கள் தீர்ப்புக்கு விடும் சட்டமூலமாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாகவே நாம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஒருபுறம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும், மறுபுறம் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, இந்த சீர்திருத்தத்தை கட்டாயமாக மக்கள் தீர்ப்புக்கு பரிந்துரைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் அந்த 100க்கு 75 சதவீத ஆதரவையும் சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
![]()