தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயைச் சந்தித்தார்.
இன்று நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலைமைச் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் செயலகத்தின் செயலாளர் மற்றும் மாநில மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான விவகாரங்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரச்சினைகள் உட்பட, தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே பொதுவான அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 30 ஆவது தெற்கு மண்டலக் குழு கூட்டத்தில் 26 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்பது விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், 17 விவகாரங்கள் மேல் பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டன.
விவாதிக்கப்பட்ட மொத்த விவகாரங்களில் ஒன்பது, ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்பு தொடர்பானவை ஆகும்.
முந்தைய கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் வகையிலும், தென்னிந்தியப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை அமித் ஷா வலியுறுத்தினார்.
மேலும், நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினைகளுக்குக் கூட்டுத் தீர்வைக் காணுமாறு இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநிலங்களையும் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக, 1956-ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலக் குழுக்கள் ஆகிய ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
பொருளாதார மற்றும் சமூகத் திட்டமிடல், எல்லைத் தகராறுகள், மொழிவாரிச் சிறுபான்மையினர் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து உள்ளிட்ட பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதித்து பரிந்துரைகளை வழங்குவது மண்டலக் குழுக்களின் பணியாகும்.
இவை பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஒன்றோடொன்று தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான கூட்டு முயற்சிக்கான பிராந்திய அமைப்புகளாகும்.
அந்தந்த மண்டலங்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, சிறிய அளவிலான உயர்மட்ட அமைப்புகளாகத் திகழும் இவை, தேசியக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து கவனத்தில் கொண்ட அதேவேளையில், பிராந்தியக் காரணிகளையும் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தக்கூடிய திறன் கொண்டவை.
![]()