2வது திருமணம் செய்தால் சம்பளம் 20% கட்

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அவரைக் கைவிடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் மாநிலத்தின், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட முதல் மனைவி முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் மாதச் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்து, அவரது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்திலும் இந்தச் சம்பளப் பிடித்தம் தொடரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி நிதிப் பாதுகாப்பை வழங்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் ஊழியர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பலதார மணத்தைத் தடுப்பதுடன், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகும் நபர்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()