கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்?

பூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் சுமார் 71% பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகின் ஐந்து பெருங்கடல்கள் உள்ளிட்ட எண்ணற்ற கடல்களில் உப்பு நீரே நிறைந்துள்ளது.
ஆனால், ஒருநாள் பூமியில் உள்ள அனைத்து கடல்நீரும் திடீரென நன்னீராக மாறிவிட்டால் என்ன நடக்கும் என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

இதனை கேட்கும் பலருக்கு இது ஒரு வரபிரசாதம் போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் அப்படி நடந்தால், அது பூமியின் உயிரியல் சமநிலையையே புரட்டிப் போடும் பேரழிவாக இருக்கக்கும்.
கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமி எவ்வாறான சலால்களை எதிர்கொள்ளும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்படும்: கடலில் வாழும் பைட்டோபிளாங்க்டன்கள் உலகின் ஆக்சிஜன் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடலின் உவர்ப்பில் ஏற்படும் திடீர் மாற்றம் இவற்றைப் பெருமளவில் பாதித்தால், கார்பன் மற்றும் ஆக்சிஜன் சுழற்சிகளும் பாரியளவில் பாதிக்கப்படும்.
கடல் பைட்டோபிளாங்க்டன்கள் பூமியின் ஆக்சிஜன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்நீர் திடீரென நன்னீராக மாறினால், இவை பாதிக்கப்பட்டு கார்பன் மற்றும் ஆக்சிஜன் சுழற்சிகள் சீர்குலையலாம். இதனால் பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியான பாதிப்பை எதி்கொள்ளும் அபாயம் உருவாகும்.

கடல்வாழ் உயிரினங்கள் அழிவை சந்திக்கும்: மீன்கள், சுறாக்கள், திமிங்கிலங்கள், பவளப்பாறைகள் என பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் உப்பு நீருக்கேற்ப தகவமைந்தவை. கடல் திடீரென நன்னீராக மாறினால், அவற்றின் உடலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம்.
உணவுச் சங்கிலியும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்: கடல்வாழ் உயிரினங்கள் குறைந்தால், கடல் உணவுச் சங்கிலியே சிதையும். இதன் தாக்கம் மீன்பிடித் தொழில் மட்டுமல்லாமல், கடலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிரொலிக்கும்.
காலநிலையும் வானிலையும் மாறலாம்: கடலின் உவர்ப்பு நீரின் அடர்த்தியையும், முக்கிய கடல் நீரோட்டங்களையும் பாதிக்கிறது. இந்த நீரோட்டங்கள் பூமியின் வெப்பத்தை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன. அவை சீர்குலைந்தால், சில பகுதிகளில் கடும் குளிரும், மற்ற பகுதிகளில் அதிக வெப்பமும் ஏற்படலாம். மழைப்பொழிவும் மாறி, சில இடங்களில் வெள்ளமும் மற்ற இடங்களில் நீண்டகால வறட்சியும் உருவாகலாம்.

விவசாயத்துக்கும் பாதிப்பு: வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும். பயிர்கள் பாதிக்கப்பட்டால், உணவுப் பற்றாக்குறையும் மேலும் தீவிரமடையலாம்.
எனவே, கடல்கள் நன்னீராக மாறுவது குடிநீர் பிரச்சினைக்கான தீர்வாக நிச்சயம் இருக்காது மாறாக பூமியின் இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் மிகப்பெரிய மாற்றமாகவே அமையும்.
கடலின் உப்பு என்பது வெறும் சுவைக்காக அல்ல, அது பூமியின் உயிரியல் மற்றும் காலநிலை அமைப்பைத் தாங்கி நிற்கும் முக்கியமான இயற்கை சமநிலையின் ஒரு பகுதி என்பதே நிதர்சனம்.
![]()