கால்பந்து உலகுக்கு விடைகொடுக்க தயாராகிறார் ரொனால்டோ

எதிர்வரும் ஆண்டே தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதன் மூலம், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு பற்றிய எதிர்பார்ப்புகளை மீண்டும் அதிகரித்துள்ளார்.
41 வயதான போர்ச்சுகல் அணியின் தலைவரான இவர், 2002-இல் ஸ்போர்ட்டிங் கிளப் மூலம் தனது மூத்த வீரருக்கான பயணத்தைத் தொடங்கியதிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மற்றும் தற்போதைய அல்-நாசர் அணிகளுக்காகப் பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்று, எக்காலத்திற்கும் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஐந்து முறை பால் ஆன் டோர் (Ballon d’Or) விருது வென்ற ரொனால்டோவின் அணி, இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்ததால், விளையாட்டு உலகின் மிக உயரிய அந்த ஒரு கோப்பை மட்டும் அவரது சாதனைகளின் பட்டியலில் இடம் பெறாமல் போனது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘வோக்’ (Vogue) இதழுக்கு அளித்த நேர்காணலில், “இதுவே எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும். ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் முத்திரையைப் பதித்துவிட்டு வெளியேற விரும்புகிறேன்” என்று ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கால்பந்து பயணத்தில், கிளப் மற்றும் தேசிய அணிகளுக்காக இவர் இதுவரை 976 கோல்களை அடித்துள்ளார்.
ஓய்வு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கால்பந்து வாழ்க்கையின் முடிவு எனது வாழ்வில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். அதை நிரப்ப ஒரே விஷயத்தைச் சார்ந்திராமல் பல வழிகளில் நேரத்தைச் செலவிட வேண்டும்.
25 ஆண்டுகள் பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு உழைத்துச் சேர்த்தவற்றை அனுபவிக்கவும், பயணம் செய்யவும், எனக்கு மிகவும் பிடித்த பேடல் (Padel) விளையாட்டைப் பார்க்கவும் விளையாடவும் திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
தனது தொழில்முறை வாழ்க்கையில் 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டும் நோக்கில், ரொனால்டோ இந்த பருவத்தில் சவுதி புரோ லீக் கிளப்பான அல்-நாசர் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார்.
![]()