தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்; மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள்

தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உணர்வுக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பவர்கள், தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகள், படிப்பு, இலக்குகள் என பலவற்றை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஆனால், தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பதல்ல; உடலையும் மூளையையும் சீராக இயங்கச் செய்யும் அடிப்படைத் தேவையாகும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடல் ஆரோக்கியம் மாத்திரமன்றி உள ஆரோக்க்கியதுக்கும் சீரான தூக்கம் இன்றியமையாது. தூக்கம் ஆடம்பரம் அல்ல; அது உயிர்வாழ்வதற்கும், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதற்கும் அவசியமான ஒன்றாகும்.
போதுமான தூக்கம் ஏன் அவசியம்?
போதுமான தூக்கம் கிடைக்கும்போது மூளையின் செயல்பாடுகள் சீராகி, நினைவாற்றல், கவனம், கற்றல் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை மேம்படுகின்றன.

அதேபோல், உடலுக்கும் தேவையான ஓய்வு கிடைப்பதால் அடுத்த நாளை சுறுசுறுப்பாக எதிர்கொள்ள முடிகிறது. எப்போதும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருப்பதையே வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதைச் சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து வேலை செய்வதால் மட்டுமே அதிக உற்பத்தித்திறன் கிடைக்கும் என்பது உண்மையல்ல. உடலுக்கும் மூளைக்கும் தேவையான ஓய்வை வழங்குவது, அடுத்த நாள் சிறப்பாகச் செயல்படுவதற்கான முதலீடாகவே பார்க்கப்பட வேண்டும்.

மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு பட்டியலாக எழுதிவைப்பது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். இதனால், “இதை மறந்துவிடக்கூடாது”, “நாளை இந்த வேலையை எப்படிச் செய்வது?” போன்ற எண்ணங்களுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியும்.
ஒவ்வொருவருக்கும் தூக்கத் தேவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மற்றவர்களின் சுறுசுறுப்பு அல்லது அவர்கள் தூங்கும் நேரத்தை நம்முடன் ஒப்பிடாமல், நமது உடலுக்கு உண்மையில் தேவையான ஓய்வை வழங்குவது முக்கியம்.

முக்கிமாக தூங்குவதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்வு தேவையில்லையோ, அதேபோல் தூங்குவதற்கும் குற்ற உணர்வு தேவையில்லை.
நல்ல தூக்கம் என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளம் அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், தெளிவான சிந்தனைக்கும், சிறந்த செயல்திறனுக்கும் அடிப்படையான விடயம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
![]()