இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவு குறித்து ஐ.நா கவலை

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கான நீண்ட கடிதம் ஒன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடையக்கூடும் என அந்த கடிதத்தின் மூலம் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவதன் மூலம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவை நீதித்துறையில் தகாத செல்வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான பாதுகாப்பு வழிமுறைகளுடன், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய நீதி மறுசீரமைப்பு செயல்முறையின் மூலமே ஓய்வுபெறும் வயதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 14(1) பிரிவுக்கும், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும் முரணாக அமையும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button