இலங்கை

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மாகாண சபையோடு முடிந்துவிடாது: சட்டத்தரணி மணிவண்ணன் திட்டவட்டம்!

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வாகாது என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தமது கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதைக் கடுமையாகச் சுட்டிக்காட்டிய மணிவண்ணன், “2017-இல் கிழக்கு மாகாண சபையும், 2018-இல் வடக்கு மாகாண சபையும் தமது பதவிக் காலத்தை நிறைவுசெய்தன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இத்தேர்தலை வேண்டுமென்றே இழுத்தடித்து வருகின்றன.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே நீடிக்க வேண்டும் என்பதிலும், தமிழ் மக்களுக்கு எள்ளளவும் அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதிலும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். தமிழ் மக்கள் தமது சொந்தப் பிராந்தியத்தில் சுயஆட்சியை நிறுவுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய தேர்தல் பொறிமுறை முடக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

2018-ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டாட்சியின் சதி நடவடிக்கைகளினாலேயே மாகாண சபை தேர்தல் சட்டத்தில் சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டு, இன்றுவரை தேர்தல் நடத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாட்டினார்.

13-வது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டிய அவர்:

“13-வது திருத்தச் சட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் எதுவும் இல்லை என்பதையும், அது எமக்கான நிரந்தரத் தீர்வு அல்ல என்பதையும் நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைக்குச் சமஷ்டி முறையிலான தீர்வே சிறந்தது என்பதில் நாங்கள் மிகத் தெளிவுடனும் உறுதியுடனும் இருக்கிறோம்” என்றார்.

மாகாண சபை தேர்தலின் அவசியத்தை விளக்கிய மணிவண்ணன், “மாகாண சபையோடு எமது உரிமைப் போராட்டம் முடிந்துவிட்டது என்றோ, இதுவே எமக்குச் போதும் என்றோ நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு ஜனநாயகப் பொறிமுறையை முடக்கி வைக்கக் கூடாது. அந்த பொறிமுறை இயங்க வேண்டியது மக்களின் உடனடித் தேவையாகும். எனவே, அரசாங்கம் தனது கடப்பாட்டை உணர்ந்து மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்” என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button