இலங்கை

நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வானில் வந்த குழுவினர் சிலர் அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று சம்பவத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளனர். வெள்ளை வானின் உள்ளே புத்தர் சிலையொன்றும் இருந்துள்ளது.

மிரட்டல் விடுத்த குழுவினர்

இதனிடையே முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் வந்த குழுவினர் சம்பவத்தை பதிவு செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் நாம் பயமில்லை எனக் கூறியுள்ளனர்.

நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள் | Buddha Statue At Amman Temple In Nuwara Eliya

இதையடுத்து மேற்படி பகுதி மக்கள் இராகலை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று காவல்துறை புத்தர் சிலை நிறுவும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் மேற்படி குழுவினரை விசாரணை செய்துள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

குறித்த பகுதியில் நூறு வருடங்களுக்கும் மேல் அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்படி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button