இலங்கை

எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!; மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்டகாலமாக காணிகளை மீட்பதற்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மன்னாரில்  வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டம், காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.மேலும், வடக்கின் சில பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button