இலங்கை

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக்கொண்டு கல்முனை வழியே காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம் பக்தர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான இவ்வழக்கு, மேலதிக விசாரணைகளுக்காகவும் வழக்கு மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்ததுடன், அன்றைய தினம் அறிவித்தல் நாளாகவும் குறிக்கப்பட்டிருந்தது.

முந்தைய விசாரணையின் போது சோகோ பொலிஸ் பிரிவினர், பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஆகிய தரப்பினருக்கு நீதிமன்ற அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்றைய விசாரணையின் போது காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக மட்டுமே சட்டத்தரணி ஆஜராகியிருந்தார். ஏனைய அரச துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் எவரும் மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இப்பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டும், அகழ்வுப் பணிகளை விரைவில் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகள் மற்றும் வழக்கு மாநாட்டுக்காக இவ்வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார் என, இவ்வழக்கின் பிரத்தியட்ச முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button