கவிதைகள்
“மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

உள்ளம் பெருங்கோவில் என்றாரே திருமூலர்
ஊனுடம்பு ஆலயம் என்றவரும் சொன்னாரே
கள்ளமிலா உள்ளமெலாம் கடவுள் வந்தமர்வார்
கருத்திலே இருத்தினால் சிறப்பாக இருக்கும்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை வாக்கு
நால்வேதப் பொருளாக நாதனே இருக்கிறான்
என்பதை நம்புவார் இவ்வுலகில் இருக்கின்றார்
நம்புவார் நம்பாதார் யாவர்க்கும் இறைவன்
நாளுமே படியளந்து கொண்டுமே இருக்கிறான்
நம்புவார் இறையை நயந்தேற்றிப் போற்கிறார்
நம்பாதார் தம்முயற்சி என்றுமே வியக்கிறார்
வேண்டுவார் வேண்டுவதைக் கொடுப்பவன் இறைவன்
வேறுபாடு காட்டாத மெய்ப்பொருளே இறைவன்
மாறுபடு மனத்தாரை மாற்றிடுவான் இறைவன்
மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
![]()