உலகம்

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

புது டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செப்டம்பர் மாதம் இந்தியா வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

கிழக்கு லடாக் எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்த இராணுவ மோதல் போக்கு மற்றும் தூதரக முயற்சிகளுக்குப் பின்னர், இந்தியா-சீனா உறவுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதில், செப்டம்பர் 12-13 திகதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

2013 முதல் அந்த கம்யூனிச நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றி வரும் ஜி ஜின்பிங், இந்தியாவுக்கு மூன்று முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

இதில் அவரது கடைசிப் பயணம் 2019 ஒக்டோபரில் அமைந்திருந்தது.

 

அதாவது, ‘உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு’ (LAC) பகுதியில் ஏற்பட்ட இராணுவ மோதல் இருதரப்பு உறவுகளை அடியோடு மாற்றியமைப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அப்பயணம் நிகழ்ந்தது.

 

இந்த நிலையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக, புது டெல்லியும், பெய்ஜிங்கும் தங்கள் தூதரக ரீதியிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கான திகதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டியிருந்தாலும், உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணிக்குழுவின் கூட்டம் வரும் வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button