‘ஹரக் கட்டா’ உட்பட ஐவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டம் இனிப் பாயாது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்வதற்குச் சட்டப்பூர்வ அடிப்படை எதுவுமில்லை என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாம் குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஹரக்கட்டா உள்ளிட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதிவாதிகளால் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றங்களின் தன்மையைக் கருத்திற் கொள்ளும்போது, அவர்களுக்கு எதிராகத் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டக் கோவையின் கீழான வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
![]()