’’என் குழந்தை அழுதால் மன்னியுங்கள்’’ -100 பயணிகளுக்கு தந்தைகொடுத்த சர்ப்ரைஸ்!

சீனாவின் ஹூபேய் மாகாணத்திலிருந்து குவாங்சி நோக்கி இரவு விமானத்தில் பயணம் செய்த சென் என்ற இளம் தந்தை, தனது 8 மாதக் குழந்தை மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே 100 ஜோடி காது அடைப்பான்களை வாங்கித் தயார் நிலையில் வைத்திருந்தார்.
விமானம் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் ஏற்படும் வளிமண்டலக் காற்றழுத்த மாற்றத்தால் குழந்தை அழக்கூடும் என்று அஞ்சிய அவர், விமானத்தில் ஏறியதும் தனது கையில் இருந்த காது அடைப்பான்களுடன் ஒவ்வொரு பயணியிடமும் சென்று, “என் குழந்தை அழுதால் மன்னியுங்கள்” என்று முன்கூட்டியே பணிவன்புடன் மன்னிப்புக் கோரியுள்ளார். அத்துடன், சத்தத்தைக் குறைப்பதற்காக அந்த காது அடைப்பான்களையும் பயணிகளுக்கு வழங்கியுள்ளார்.
இந்த அன்பான மற்றும் சிந்தனைமிக்க செயலைக் கண்டு நெகிழ்ந்த பயணிகள் பலரும், “குழந்தை அழுவது இயல்பான விஷயம்தானே, அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அவரை அன்புடன் ஆற்றுப்படுத்தினர். இதனால், அவர் கொண்டுவந்த 100 ஜோடிகளில் சுமார் 20 ஜோடிகள் மட்டுமே பயணிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன; மற்ற பயணிகள் அதனை மரியாதையுடன் மறுத்துவிட்டனர்.
ஆச்சரியப்படும் வகையில், அந்த 8 மாதக் குழந்தையும் விமானப் பயணம் முழுவதும் எந்தவிதத் தொந்தரவுமின்றி மிகவும் அமைதியாகவே பயணம் செய்தது.
பயன்படுத்தப்படாமல் மீதமிருந்த காது அடைப்பான்களை, தங்களது திரும்புதலின் போது பயன்படுத்திக் கொள்ளுமாறு விமானப் பணியாளர்களிடம் அந்தத் தந்தை அன்பளிப்பாக வழங்கினார். சமூக வலைத்தளங்களில் கண்ட இதுபோன்ற பொதுநல எண்ணம் கொண்ட செயல்களே தனக்கு இந்த யோசனையைத் தந்ததாக அவர் தெரிவித்தார்.
மற்றவர்களின் சிரமங்களை உணர்ந்து சிறிய அளவிலாவது அக்கறை காட்டினால், நூறு பேரின் மனதையும் வெல்ல முடியும் என்பதை இந்தத் தந்தை தனது செயலால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
![]()