சவுதி சிறையிலுள்ள அனோஜனை மீட்க அரசு தலையிடும்

சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்ற இளைஞன் விடயத்தில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர ரீதியில் தலையிடுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த போது, சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜன் என்ற இலங்கை இளைஞனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தில், அவருக்கு தேவையான சட்ட உதவிகளை பெற்று அவரை விடுவிக்க அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடம் இப்போது இல்லை. ஆனால் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர ரீதியில் எமக்கு எந்த வழியில் தலையிட முடியும் என்று ஆராய்ந்து கூறுகின்றோம் என்றார்.
![]()