“எதிரணிகளின் ஒன்றிணைவு தேர்தல் கூட்டணி அல்ல”

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்திற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இது ஒரு பொது நோக்கமாகும். இந்த விடயத்தில் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. இந்த பொது மேடை என்பது ஓர் அரசியல் கூட்டணி அல்ல. எனவே, இது குறித்து ஆளுங்கட்சி அச்சப்பட வேண்டியதில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். இருப்பினும், மக்கள் மத்தியில் நமது கருத்துகளை முன்வைப்பதற்காகவே அதனைப் பயன்படுத்தினோம். தற்போது மக்கள் மத்தியில் இது தொடர்பான உரையாடல் உருவாகியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்திருந்தாலும், எதிர்க்கட்சியின் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது” என்று நளின் பண்டார எம்.பி. தெரிவித்தார்.
![]()