உலகம்

பிரான்சில் புதிய துப்பாக்கிச் சூட்டுச் சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டம் தொடர்பாக பிரான்சில் கடும் அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் எழுந்துள்ளன. அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் அவசியம் என வலதுசாரி அரசியல் தரப்புகள் வலியுறுத்துகின்றன.

அதேவேளை, இது மனித உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக இடதுசாரி கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 7 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கையொப்பமிட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அது ஏற்கப்படவில்லை.

இதையடுத்து, செப்டம்பர் 19 ஆம் திகதி நாடளாவிய அளவில் எதிர்ப்புப் பேரணி நடத்த மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகங்கள், குறிப்பாக தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருபுறம், வீதி வன்முறை, கொள்ளை, வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் கிடைப்பதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மறுபுறம், நிறவெறி, தவறான அடையாளம் காணல் அல்லது காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் சிறுபான்மையினருக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

குறிப்பாக, மொழிப் பிரச்சினை அல்லது பதற்றம் காரணமாக காவல்துறையின் உத்தரவுகளை சரியாகப் பின்பற்றத் தவறினால், அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

இதனையடுத்து, புலம்பெயர் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுக்கு சட்டங்களை மதித்து நடந்து கொள்வதன் அவசியத்தை விளக்க வேண்டும் என்றும், காவல்துறையினருடன் மோதல்களைத் தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

அதேபோன்று, வெளியே செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத பொருட்கள் அல்லது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை அமைதியாகப் பின்பற்ற வேண்டும், தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், இளைஞர்களின் நட்பு வட்டம் மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகத்தினர் புதிய சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதிமுறைகளைப் பின்பற்றி சட்டத்திற்குள் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button