கவிதைகள்

சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம்!… கவிதை… ஜெயராமசர்மா

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவினர்
வந்து நான் பிறந்து விட்டேன்
சொந்தங்கள் பந்தங்கள் தூரவே நின்றன
நொந்து நான் வெந்து விட்டேன்

எந்தையும் என்னை விட்டுமே போயிட
ஏங்கியே தாயுடன் தவித்துமே நின்றேன்
வந்தது ஏனென தினமுமே எண்ணி
வாடியே நானும் மருண்டு விட்டேன்

சின்னப் பிள்ளை என்னதான் செய்வேன்
சிறகினை இளந்த பறவையாய் ஆகினேன்
அடைக்கலம் கிடைத்தது அம்மாக்கும் எனக்கும்
ஆறுதல் தேறுதல் அடைக்கலம் ஆனது

எழுந்து நடந்திட ஊன்றுகோல் கிடைத்தது
என்றுமே நானும் எண்ணியே இருந்தேன்
ஆதாரம் ஆணிவேர் ஆகிய அம்மாவும்
அனாதையாய் என்னை விட்டுமே அகன்றார்

எப்படி எழுந்தேன் எப்படி நிமிர்ந்தேன்
எனக்கே தெரியா சித்தே நடந்தது
படித்தேன் படித்தேன் பட்டங்கள் பெற்றேன்
பதவிகள் வந்தன பலருமே பார்த்தனர்

துணைகளை இழந்தேன் துயரப் பட்டேன்
வாழ்க்கைத் துணையென வந்தாள் வரமாய்
வசந்தம் மிகுந்தது வாழ்வு ஒளிர்ந்தது
வாழும் வாழ்க்கை மங்கலம் ஆனது

இறைவனை நம்பினேன் எனை விடவில்லை
கணபதி தாழினைப் பற்றியே வளர்ந்தேன்
கஷ்டங்கள் அனைத்தையும் கணபதி போக்கினார்
கணபதி தொழுதிடக் கஷ்டங்கள் அகலும்

அப்பா அம்மாவை அடிக்கடி நினைப்பேன்
அவர்களை நினைக்கா இருந்ததே இல்லை
எவ்வுலக கிருந்தும் எனை வாழ்த்துவார்கள்
என்னும் நினைப்பும் என்னுளம் இருக்கு

சித்தாத்தம் வேதாந்தம் தெரியா திருந்தேன்
தெரியும் காலத்தில் வந்துமே நிற்கிறேன்
எத்தனை சிக்கல் எத்தனை கலக்கம்
சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

One Comment

  1. ஒரு வாசல் மூடி மறுவாசல் திறந்தான் இறைவன். படிப்பு நல்ல பாதை கொடுத்தது. வாழ்க்கைத்துணை வந்த பின்பு வசந்தம் வந்ததைக் கேட்பது பேரின்பம். இருவரும் இணைந்து நெடுங்காலம் வாழ இறையை இறைஞ்சி நிற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button