கவிதைகள்

பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார் !…. கவிதை…. ஜெயராமசர்மா

இறையுடன் தோழமை பூணலாம் மென்னும்
வழியினைக் கண்டவர் ஆலால சுந்தரர்
ஆலால சுந்தரர் தோழமை என்பது
அன்பு சிவத்துடன் இணைந்திடு நிலையே

ஏசினார் பேசினார் எள்ளிநகை யாடினார்
இறைவனோ அவரை விட்டு விடவில்லை
பேசிய வாயினால் பாடுக என்றார்
பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்

தொண்டருள் சுந்தரர் வன்தொண்டர் ஆவார்
வன்தொண்டர் அடைமொழி அவரது சிறப்பே
எம்பிரான் அருளைப் பெற்றது வன்சொலே
தோழமை உணர்வால் சொன்னதும் வன்சொலே

அரன் அடியார்கள் பெருமையை அறிந்திட
வைத்தவர் ஆலால சுந்தரர் ஆவார்
சுந்தரர் தொட்ட வித்தினைக் கண்டார்
சேக்கிழார் பெரிய புராணத்தைத் தந்தார்

அரன் அடியாரை அனைவரும் அறிய
அரன் அடியாரின் அற்புதம் விளங்க
அடித்தளம் அமைந்தவர் சுந்தரர் ஆவார்
சுந்தரர் என்றுமே சிவசைவச் சொத்து

எளிமையும் இனிமையும் உரிமையும் அன்பும்
இருந்திடும் சுந்தரர் பாடல்கள் அனைத்தும்
நட்பும் இருக்கும் பக்தியும் இருக்கும்
சங்கரன் சரணாகதி தாங்கியும் இருக்கும்

சந்தமொடு ஓசையுடன் தாள லயமோடு
செந்தமிழில் தேவாரம் தந்து குவித்தாரே
செந்துருத்திப் பண்ணாலே பாடி அளித்தாரே
சம்பந்தர் அப்பர் தொட்டுவிடாப் பண்ணால்

தீதகன்று உலகுய்ய திருவவதாரம் செய்தார்
தெய்வத்தமிழ் தத்திடவே சுந்தரரும் வந்தார்
நாதனுடன் நட்புரிமை பூண்ட நல்லடியார்
நம்சைவ அடியாரை நாடறியச் செய்தார்

அழகும் சுந்தரர் அலங்காரம் சுந்தரர்
அரனுக்குக் அருகிருக்கும் அருநட்பும் சுந்தரர்
அந்தணராய் பிறந்தார் அரசராய் வாழ்ந்தார்
ஆனாலும் சுந்தரர் அரனுக்கு அடிமையே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button