வாக்குமூலம் அளித்தவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!; நாமல் ஷ சாடல்

தற்போதைய காலகட்டமானது நாட்டில் தற்கொலைகள் மிக அதிகமாக பதிவாகும் ஒரு துரதிர்ஷ்டவசமான காலகட்டமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் டெடிகம தொகுதியில் நடைபெற்ற கோட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சில அதிகாரிகளை வாக்குமூலம் பெறும் இடங்களுக்கே சென்று, ‘உங்களுக்கும் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்’ என அச்சுறுத்தி அழுத்தம் கொடுப்பதாகவும், அவ்வாறு அச்சுறுத்தப்பட்ட சிலரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை முற்றாக சீர்குலைத்து, அரச சேவையை அழித்து, அதனைத் தங்களின் அரசியல் தேவைகளுக்கான ஒரு கருவியாக மாற்ற முற்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு எதிராக மக்கள் பெரும்பான்மையாக அணிதிரண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் நீதித்துறையை அரசியல் மயமாக்க முயற்சிப்பதால், காமன்வெல்த் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அதன் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச அதிகாரிகள் நாட்டின் நலனுக்காகத் தீர்மானங்களை எடுத்தால் சிறைச்சாinternal செல்ல நேரிடும் என்ற அச்சம் காரணமாக ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் முடங்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
இலங்கை வரலாற்றிலேயே வெற்றிலை முதல் அனைத்து பொருட்களுக்கும் அதிகளவிலான வரிகளை விதித்த அரசாங்கமாக இது காணப்படுவதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி உள்நாட்டு வர்த்தகர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதிக வரி மூலம் ஈட்டிய பெருமளவு பணம் நிதியமைச்சின் கணக்கில் இருந்ததாகவும், அதனை ஹேக்கர் (Hacker) ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாகவும் அரசாங்கம் கூறுவது விந்தையானது எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, இது குறித்து நிதியமைச்சும் மத்திய வங்கியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டாலும், இறுதியில் இந்த இழப்பைச் செலுத்த வேண்டியவர்கள் இந்நாட்டு மக்களே என்றார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மற்றும் துறைமுக ஊழல்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், ஆனால் இந்த ஊழல்களைச் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு எதிராக 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸார் மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் சாடினார்.
இவ்வாறான அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சியைத் தொடர அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதற்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் மக்கள் அனைவரும் கிராம மட்டத்திலிருந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.
![]()