இலங்கை

நீண்ட கால இடைவெளிக்குப் பின் நேரில் சந்திக்கும் ரணில் – சஜித்! – நீதியரசர்களின் ஓய்வு வயது விவகாரத்தில் ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார். சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்துக்கு ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இதற்கிணங்க, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்‌ஷவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button