உலகம்

நோர்வேயில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை

தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில்  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்றுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

ஒஸ்லோவிற்கு (Oslo) மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது.

எனினும், இந்த விபத்தில் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தீயை அணைக்கும் பணியில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரும் ஊற்றப்பட்டு வருகின்றது.

தீ தொடர்ந்து எரிந்து வருவதுடன், அது அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கும் பரவியதால், நூற்றுக்கணக்கான மக்களை பொலிஸார் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

இந்த தீ விபத்து எங்கு, எப்படித் தொடங்கியது என்பது குறித்த காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button