திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()